"யோகா குரு ராம்தேவ்" ஊழலுக்கு எதிரான அடுத்த உருப்படி ரெடி!


சந்தனக்கடத்தல் வீரப்பன் செயல்பாடுகளில் உச்சத்தில் இருந்தபோதும்,அவன் உயிரோடு இருந்தவரையிலும் பத்திரிகைகளும், படங்களும் தொடர்ந்து அவன் தொடர்பான செய்திகளையும் சம்பவங்களையும் வெளியிட்டுக்கொண்டே இருந்தன. அவனுக்கொரு முடிவுகட்டியதும் அவனைப்பற்றிய செய்திகள் காணாமல் போய்விட்டன. ஆனால் அவன் செய்துகொண்டிருந்த கடத்தல் அல்லது கடத்தலில் பெரும் லாபம் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு செய்துகொண்டிருந்த உதவி இவை எதுவும் நின்றுபோயிருக்காது என்பது நாடறிந்தது.அது யார்மூலமாகவோ சுமூகமாய் நடந்துகொண்டுதான் இருக்கும். அதேபோல் ஊழலுக்கு எதிரான அன்னா அசாரேவின் கூக்குரலுக்குப்பின் ஆளாளுக்கு குரலெழுப்பி அதை கூச்சலாக்கிவிட்டார்கள்.இப்போது ஊழலுக்கெதிராய் உண்ணாவிரதமிருப்பதாய் மாரடித்துக்கொள்பவர் மன்னிக்கவும் மார்தட்டிக்கொள்பவர் "யோகா குரு ராம்தேவ்". இதையும் பெரும் போராட்டமாகவும் எழுச்சியாகவும் போற்றுகின்றன ஊடகங்கள். பலரும் நினைத்ததைப்போல், சொல்வதைப்போல் 20 x 20 உலகக்கோப்பைக்குப்பின் ஊடகங்களில் ஏற்பட்ட இடைவெளி போதைக்கு "யோகா குரு ராம்தேவ்" ஊறுகாய்யாகிறார் அவ்வளவுதான். மற்றபடி ஊழலோ அதில்சம்பந்தப்பட்டவரோ தங்கள் காரியங்களை சிறப்பாகவே நடத்திக்கொண்டிருப்பார்கள் என்பது உறுதி.


திரைப்படங்களில் இடையிடையே ஏற்படும் தோய்வை சரிசெய்ய ஐட்டம் டேன்ஸ் தேவைப்படுவதுபோல் 20 x 20 க்குப்பின் ஊடகங்களுக்கு தேவைப்படும் அடுத்த உருப்படி ரெடி. குரு ராம்தேவ் சாகும் வரை உண்ணாவிரதம் என அறிவித்ததும் பதறியடித்துக்கொண்டு அவர் காலில் விழாத குறையாக உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர் பல அமைச்சர்கள். எந்த ஒரு மக்கள் பிரச்சனைக்காகவும் இத்தனை அமைச்சர்கள் ஒனறாய் கூடிவிடமாட்டார்கள் என்பது நிச்சயம். இந்த விஷயத்தில் அமைச்சர்கள் விமானநிலையத்திற்கே சென்று உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டது ஊழலை ஒழிப்பதில் அவர்களுக்குள்ள சங்கடத்தை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது.


Comments

  1. எந்த ஒரு மக்கள் பிரச்சனைக்காகவும் இத்தனை அமைச்சர்கள் ஒனறாய் கூடிவிடமாட்டார்கள் என்பது நிச்சயம்.

    ReplyDelete
  2. அடுத்து இவரை சமாளித்து
    ஊழலைக் காப்பாற்ற வேண்டுமா
    காங்கிரசுக்குத்தான் எத்தனை சோதனை

    ReplyDelete

Post a Comment